Thursday, June 21, 2012

Flame Virus!!!

புதிய வைரஸ் ஒன்று வேகமாகப் பரவி வருவதனை, வைரஸ் குறித்து ஆய்வு மேற்கொண்டு வரும் காஸ்பெர்ஸ்கி நிறுவனம் கண்டறிந்து எச்சரிக்கை வழங்கியுள்ளது. ஈரான் நாட்டில் பரவியுள்ள இந்த வைரஸ் விரைவில் மற்ற நாடுகளிலும் பயன்படுத்தப்படும் கம்ப்யூட்டர்களில் பரவலாம் என ஐக்கிய நாடுகள் சபையின் பன்னாட்டு தொலைதொடர்பு அமைப்பு அறிவித்துள்ளது. (http://in.reuters.com/article/ 2012/05/29/cyberwar-flame-idINDEE84S0 EU20120529) இந்த வைரஸ் இதுவரை தாங்கள் சந்திக்காத ஒரு குழப்பமான குறியீட்டினைக் கொண்டு இயங்குவதாக காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. இது குறித்து மேலும் சில தகவல்களை இங்கு பார்க்கலாம்.

ப்ளேம் வைரஸ், கம்ப்யூட்டரை நேரடியாகத் தாக்காமல், ட்ரோஜன் வைரஸ் போலவே நுழைகிறது. பெரும்பாலும் பாதிக்கப்பட்ட இணைய தளங்களிலிருந்து, அவற்றை அணுகும் கம்ப்யூட்டர்களுக்குச் செல்கிறது. பின்னர், யு.எஸ்.பி. ப்ளாஷ் ட்ரைவ், லோக்கல் நெட்வொர்க் ஆகியவற்றின் மூலம் மற்ற கம்ப்யூட்டர்களை அடைகிறது.

பாதிப்பை ஏற்படுத்த கம்ப்யூட்டரை அடைந்த பின்னர், பாஸ்வேர்ட் தகவல்களைத் திருடுதல், மைக் மூலம் அனுப்பப் படும் ஆடியோ தகவல்களைப் பதிந்து அனுப்புதல், முக்கிய புரோகிராம் இயக்கங்களின் ஸ்கிரீன் ஷாட் எடுத்து அனுப்புதல், இன்ஸ்டண்ட் மெசேஜ் விண்டோக்களில் உள்ள தகவல்களை எடுத்து அனுப்புதல் போன்ற அனைத்து திருட்டு வேலைகளை யும் நாசூக்காக மேற்கொள்கிறது. கம்ப்யூட்டருடன் புளுடூத் முறையில் இணைக்கப்படும் சாதனங்களிலிருந்தும் தகவல்களைத் திருடுகிறது இந்த வைரஸ். திருடப்படும் தகவல்கள் அனைத்தும், உலகின் பல நாடுகளில் இயங்கும் இதன் சர்வர்களுக்கு அனுப்பப்படுகின்றன. 2010 ஆம் ஆண்டில், ஈரான் நாட்டில் பெரும் சேத விளைவுகளை ஏற்படுத்திய ஸ்டக்ஸ்நெட் (Stuxnet worm) போல இது செயல்படுகிறது. ஆனால், அதனைக் காட்டிலும் குழப்பமான குறியீட்டில் இந்த வைரஸ் எழுதப்பட் டுள்ளது. எனவே இதனைக் கண்டறிந்து கட்டுப்படுத்துவது சிரமமாக இருக்கிறது. இந்த வைரஸ் பைல் 20 எம்பி இடத்தை எடுத்துக் கொள்ளும் அளவிற்குப் பெரியதாக உள்ளது.
இந்த வைரஸ், வங்கி இணையக் கணக்கிலிருந்து பணம் மாற்றும் வழியைக் கொண்டிருக்கவில்லை என்பது சற்று ஆறுதலான விஷயம் தான். ஈரான் எண்ணை வள நிறுவனங்களில் குழப்பத்தினை உண்டு பண்ண இது தயாரிக்கப்பட்டி ருக்கலாம் என்றும் ஒரு கோணத்தில் ஆய்வு நடக்கிறது. அப்படி இருந்தால், மற்ற நாடுகளின் அடிப்படைக் கட்டமைப்பில் நாச வேலைகளை மேற்கொள்ள இந்த வைரஸ் உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

வர இருக்கும் தொழில் நுட்ப மாற்றங்கள்


அடுத்த 10 ஆண்டுகளில் கம்ப்யூட்ட ரில் என்ன மாற்றங்கள் வரும். இன்றைய தொழில் நுட்ப வளர்ச்சி யின் அடிப்படையில் கணித்த சில எதிர்பார்ப்புகளை இங்கு காணலாம்.

1. அதிக இடத்தை எடுத்துக் கொண்டு, மெதுவாகவும், சூடாகவும் இயங்கும் சிலிகான் நீக்கப்படும். கம்ப்யூட்டரின் புதிய கட்டமைப்பில் குறைவான அளவில் எலக்ட்ரான்களும் அதிக அளவில் ஆப்டிகல் இழைகளும் பயன்படும். ஆப்டிகல் கம்ப்யூட்டர்கள் வரும் நாள் வெகு தொலைவில் இல்லை.

2. கம்ப்யூட்டர்கள் திருடு போகாது. பயோமெட்ரிக் பயன்பாடு பரவலாகி, கைரேகைகளுக்கு மட்டுமே கம்ப்யூட்டரின் கதவு திறக்கும். 

3. கீ போர்டுகள் ஓரம் கட்டப்படும். டச் ஸ்கிரீன் இப்போதே வந்துவிட்டது. இனி சைகை மூலம் நாம் கம்ப்யூட்டரையும், சாப்ட்வேர் அப்ளிகேஷனையும் இயக்க லாம். அடுத்ததாக நம் குரல் மூலமே அனைத்தையும் இயக்கும் வழிகள் கண்டறியப்படும். 

4. கம்ப்யூட்டர்கள் கையடக்க சாதனமாக மாறும். அலுவலகத்தில் டெஸ்க்குகளில் உள்ள இணைப்புகளில் இணைத்த பின்னர், டாப்பில் உள்ள பெரிய திரைகளில் கம்ப்யூட்டர் இயங்குவதைப் பார்க்கலாம். எனவே டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் இனி டெஸ்க்கில் உள்ள டாப் கம்ப்யூட்டராக இயங்கும். 

5.வீடுகளில் உள்ள கம்ப்யூட்டர்கள் நமக்காக, நம் பெர்சனல் தேவைகளுக்காக இயங்கும். நாம் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் நம்மை ஓய்வெடுக்கச் சொல்லி, நமக்காக சாதனங்களை இயக்கும். சமையல், வாஷிங், டிவி, ஏர்கண்டிஷனர் இயக்கம் ஆகியவற்றைக் கம்ப்யூட்டரே பார்த்துக் கொள்ளும்.

6. டிவிடிக்கள் பல டெராபைட்டுகள் கொள்ளளவினைக் கொண்டிருக்கும். பிளாஸ்டிக் பிளாட்டர் படு வேகத்தில் சுழலும். ஹோலோ கிராபிக் தொழில் நுட்பத்தில் எழுதுவதற்கு ஒரு பக்கத்தில் ஒரு லேசரும், இன்னொரு பக்கத்தில் இன்னொன்றுமாக இயங்கும். 

7.இப்போதிருக்கும் சிபியு அப்படியே இருக்கும். ஆனால் எலக்ட்ரானிக் மைக்ரோ ப்ராசசருக்குப் பதிலாக ஆப்டோ எலக்ட்ரானிக் இன்டக்ரேய்டட் சர்க்யூட் அமைக்கப்படும். இதனை ஸ்விட்ச் ஆன் செய்திட சிலிகான் இருக்கும். ஆனால் மற்ற இயக்கவேலைகளை ஆப்டிக்ஸ் பார்த்துக் கொள்ளும். தற்போது கிடைக்கும் இயக்க வேகத்தினைக் காட்டிலும் 100 மடங்கு அதிக வேகத்தில் சிபியு இயங்கும். 

8. இனி ராம் மெமரி ஹோலோகிராபிக் ஆக இருக்கும். இது முப்பரிமாணம் உடையதால், எத்தனை அடுக்குகளையும் இது கொள்ளும். எனவே கொள்ளளவு கற்பனையில் எண்ண முடியாத அளவில் அமையும். 

9.இன்டெல் நிறுவனத்தின் புதிய ப்ராசசர் கள் எண்ணிப் பார்க்க இயலாத வேகத்தில் செயல்படும். 

10. இன்டர்நெட் டிவி புழக்கம், கம்ப்யூட்டருடன் இணைக்கப்படும் டிவி, ஸ்மார்ட் போன், பல மானிட்டர்களுடன் இயங்கும் கம்ப்யூட்டர், புளு ரே டிவிடி, விண்டோஸ் புதிய சிஸ்டம் தரும் முழு பயன்பாடு, நம் வேலைகளுக்கேற்ப இயக்க வேகத்தை மாற்றிக் கொள்ளும் சிப் என வரும் ஆண்டுகளில் முற்றிலும் புதிய தொழில் நுட்பங்கள் வர இருக்கின்றன.

- Computer Malar..

Saturday, February 18, 2012

இந்திய ஐ.டி. துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும்.

சர்வதேச பொருளாதார மந்தநிலையிலும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதில் இந்திய ஐ.டி. நிறுவனங்கள் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றன. நடப்பு நிதி ஆண்டில் இத்துறையில் புதிதாக 2.30 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.2012-13ம் நிதி ஆண்டிற்காக இதுவரை வளாகத் தேர்வு வாயிலாக ஒரு லட்சம் பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் என நாஸ்காம் அமைப்பின் தலைவர் ராஜேந்திர பவார் தெரிவித்துள்ளார். நடப்பு நிதி ஆண்டில், ஐ.டி. துறையின் வருவாய் 16 சதவீதம் அதிகரிக்கும் நிலையில், வேலைவாய்ப்பு பெறுபவர்கள் எண்ணிக்கை 10 சதவீதம் உயரும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய ஐ.டி. நிறுவனங்கள் உள்நாட்டில் மட்டுமின்றி, வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் அளித்து வருகின்றன. கடந்த சில ஆண்டுகளில் அமெரிக்காவில் 25 ஆயிரம் பேருக்கு வேலை அளித்துள்ளதாக டி.சி.எஸ். நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இந்திய ஐ.டி. துறை அபார வளர்ச்சி கண்டு வருகிறது. 20 ஆண்டுகளுக்கு முன்னர் இத்துறையின் வருவாய் 10 கோடி டாலராக இருந்தது. இது தற்போது பன் மடங்கு அதிகரித்து 10,000 கோடி டாலராக உயர்ந்துள்ளது. இந்திய ஐ.டி. நிறுவனங்களுக்கு உள்நாட்டிலும் வர்த்தக வாய்ப்பு உருவாகி வருகிறது.

Tuesday, February 7, 2012

Google - Youtube சாதனை!

வீடியோ காட்சிகளுக்கென கூகுள், ஏற்கனவே இயங்கி வந்த யு--ட்யூப் தளத்தினை வாங்கிச் செம்மைப் படுத்தி, அடிக்கடி அதனை மேம்படுத்தும் செயலில் இறங்கியது. வாடிக்கையாளர்கள் தங்களின் வீடியோ பைல்களை அப்லோட் செய்திடவும், வீடியோ காட்சிகளைப் பார்க்க விரும்பு பவர்கள், தேடிக் கண்டறிந்து காணவும் பல வசதிகளையும் தேடல் பிரிவுகளையும் தந்துள்ளது.

இந்த இமாலய சாதனை இப்போது பல புதிய சிகரங்களை எட்டியுள்ளது. தினசரி இந்த தளத்தில் 400 கோடி வீடியோ காட்சிகள் பார்க்கப்படுகின்றன. ஒவ்வொரு நிமிடத்திலும் சராசரியாக 60 மணி நேர வீடியோ காட்சிகள் பைல்களாக அப்லோட் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு விநாடியிலும் ஒரு மணி நேர வீடியோ காட்சி அப்லோட் செய்யப்படுகிறது. அதாவது ஒவ்வொரு 24 விநாடிகளிலும் 24 மணி நேர வீடியோ மேலேற்றம் செய்யப்படுகிறது. இது தொடர்ந்து 25% அதிகரித்து வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், கூகுள் அனைத்து பிரிவுகளிலும், நல்ல, தரமான வீடியோ காட்சிகளை அனுமதிப்பதுதான். கூகுள் இதனைக் கொண்டாடும் வகையில் தனியே தளம் ஒன்றை www.onehourpersecond.com என்ற முகவரியில் அமைத்துள்ளது. இங்கு சென்றால், இனிய இசை மற்றும் கேலிச் சித்திரங்களுடன் கூகுளின் சாதனையைப் பல வழிகளில் ஒப்பிட்டு கண்டு ரசிக்கலாம்.

Google - Facebook போட்டி!!


தன்னுடைய கூகுள் ப்ளஸ் மூலம், சரியான போட்டியைச் சென்ற ஆண்டில் பேஸ்புக் தளத்திற்கு வழங்கியது கூகுள். இது நடப்பாண்டில் இன்னும் அதிகமாகும் என்று இத்துறை வல்லுநர் களால் எதிர்பார்க்கப் படுகிறது. உலகின் மிகப் பெரிய சமூக தளமாக பேஸ்புக் விளங்குகிறது. பெரிய இன்டர்நெட் நிறுவனமாக கூகுள் இயங்குகிறது. இதில் சமூக தளத்தில் முதல் இடத்தைப் பெற இரண்டிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. இதன் மூலம் வரும் விளம்பர வருமானத்தை அதிக அளவில் கைப்பற்றவே இந்த போட்டி.

இந்தப் போட்டியில் இதுவரை பேஸ்புக் தளத்தின் கை தான் ஓங்கி உள்ளது. இருப்பினும் இந்த ஆண்டில் கூகுள் ப்ளஸ் சரியான போட்டியைத் தரும். இதனால், இந்த இரண்டினையும் பயன்படுத்து வோருக்கும் லாபம் தான். பலவிதமான புதிய வசதிகளைத் தந்து தங்கள் வாடிக்கையாளர்களைத் தக்க வைப்பதுடன், புதிய வாடிக்கையளர் களையும் இழுக்க இவை இரண்டும் முயற்சிக்கும். அதே போல, தர்ட் பார்ட்டி என அழைக்கப்படும் பிற நிறுவனங்களும், இந்த இரண்டு தளங்களுக்குமான ஆட் ஆன் தொகுப்புகளைத் தந்து, இந்த சந்தையில் தங்களுக்குமான பங்கினைப் பெற முயற்சிக்கும்.

இந்நிலையில், 2012 முதல் பாதியில், பேஸ்புக் பங்குகளை வெளியிட்டு மூலதன நிதி திரட்டலாம். இது கூகுள் நிறுவனத்துடன் போட்டியிட கூடுதல் சக்தியைத் தரும். ஆனால், பங்கு வெளியீட்டிற்கு ஆதரவு கிடைக்கவில்லை என்றால், அந்த சூழ்நிலை பேஸ்புக் இணைய தளத்தைப் புரட்டிப் போட்டுவிடும். கூகுளின் கை ஓங்கிவிடும். எனவே தான் இந்த ஆண்டு இவை இரண்டின் இடையேயான போட்டி பல முனைகளில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tuesday, January 17, 2012

அன்று அவமானம்! இன்று வெகுமானம்!

சில ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம் இது. ஜெர்மனியின் புகழ்பெற்ற தொழில்நுட்பம் மற்றும் அறிவியல் ஆய்வு கூடத்தில் அவமானப் படுத்தப்பட்டான் அந்த இந்தியச் சிறுவன். சின்னஞ்சிறு வயதில் தொழில்நுட்பம் சார்ந்த அவனது கோட்பாடுகள் உருவாகியிருந்தன. அங்கு கூடியிருந்த தொழில்நுட்ப நிபுணர்கள்,அந்தச் சிறுவனை அவமானப்படுத்தினர். துளசி கண்டறிந்த அறிவியல் கூறுகள் அனைத்தும் போலியானவை என்றனர். துளசி தெரிவித்த அறிவியல் தகவல்கள் அனைத்தும் மனப்பாடம் செய்யப்பட்டு ஒப்பிக்கப்பட்டவை என்று கூறி அவன் சாதனை கடுமையாக விமர்சிக்கப்பட்டது. குன்றிப்போய் வெளியேறிய அந்தச் சிறுவன், இன்று குன்றென நிமிரும் இளைஞராய் சாதனை படைத்துள்ளார்.

ஒன்பது வயதில் மேல் நிலை பள்ளிப்படிப்பு, 10வயதில் B.Sc பட்டம், 12 வயதில் M.Sc பட்டம், 21 வயதில் குவான்டம் கம்ப்யுடேஷன் (QUANTUM COMPUTATION) துறையில் முனைவர் பட்டம் பெற்ற இளைஞர் துளசிதான் அந்த இளைஞர்… உலகின் முதல் ஏழு இளம் சாதனையாளர் பட்டியலில் இடம் பிடித்திருக்கும் “தக்கத் அவ்தார் துளசி”யின் வெற்றிக்கு வெகுமானமாய் உலகின் பல மூலைகளில் இருந்தும் வேலைக்கான அழைப்புகள் குவிகின்றன. கண்ணை மறைக்கும் கவர்ச்சிகரமான உயர்ந்த சம்பளம், வெளிநாட்டில் சொகுசு வாழ்க்கை என எதுவும் தேவையில்லை என்பது இந்த இலட்சிய இளைஞரின் முடிவு. குவான்டம் கம்ப்யுடேணன் துறையில் இந்தியாவை முன்னணிக்கு கொண்டு வருவதும் அதன் வளர்ச்சிக்காக ஒரு மாபெரும் ஆய்வுக் கூடம் எழுப்ப வேண்டும் என்பதுதான் துளசியின் தற்போதைய கனவாம்.

மூத்து முதிர்ந்த அனுபவசாலிகள் பலரும் தங்கள் வெற்றியின் அடித்தளமாய் விவரிப்பதென்னவோ அவமானங்களையும், மறுக்கப்பட்ட வாய்ப்புகளையும்தான். இவை இரண்மையுமே மூலதனமாக்கி துள்ளித் திரியும் இளம் வயதில் பாம்பே ஐஐடியின் துணைப் பேராசிரியராக முன்னேறியிருக்கிறார் துளசி. இந்தியாவில் இருபத்தி இரண்டு வயதில் முனைவர் பட்டம் பெற்று புகழ்பெற்ற பாம்பே ஐஐடியின் இயற்பியல் துறை துணைப் பேராசிரியராக உயர்ந்திருக்கும் துளசியிடம் இந்த சாதனை எப்படி சாத்தியப்பட்டது என்ற கேள்விக்கு…

அவமானங்களைப் புறம் தள்ளி விமர்சனங்களை ஏற்றுக்கொண்டு, இலக்கில் மட்டுமே என் கவனத்தை குவித்திருந்தேன். அதுதான் இன்று பல வெற்றிகளை எனக்குக் குவித்திருக்கிறது. கற்பதன் மூலமும் கற்பிப்பதன் மூலமும் இன்னும் பல உயரங்களைத் தொட வேண்டும்” என்று உற்சாகமாக கூறுகிறார் துளசி. எதிர்ப்புகளையும் ஏமாற்றங்களையும் தாண்டி வெற்றி சிகரத்தை எட்டிப்பிடித்திருக்கும் சாதனை இளைஞர் பாராட்டப்பட வேண்டியவர்..

அறிய வேண்டிய ஆளுமைகள் !

மனிதகுல வரலாற்றை மாற்றியமைத்த ஆப்பிள்கள் மூன்று. ஆதாம் ஏவாள் கண்ட ஆப்பிள். ஐசக் நியூட்டன் தலையில் விழுந்த ஆப்பிள். மூன்றாவதாக ஸ்டீவ் ஜாப்ஸ் கணினி உலகுக்குத் தந்த ஆப்பிள். கடவுளின் உலகத்தில் மட்டுமல்ல, கம்ப்யூட்டர் உலகத்திலும் ஆப்பிள் விலக்கப்பட்ட கனியாகி விட்டதுதான் ஆச்சரியம். ‘கம்ப்யூட்டர்’ என்கிற சொல்லை உச்சரிக்க உலகத்தின் உதடுகள் எழுத்துக் கூட்டியபோது, அதன் சுவையை உணர்த்திய பெயரே ஆப்பிள்தான்!

கையாளச் சிரமமான காரியம் என்று கம்ப்யூட்டர் குறித்த கருதுகோளை உடைத்தது கூட, ஆப்பிள் செய்த அரிய சாதனைதான். வெற்றியின் உச்சத்தில் இருந்த ‘ஆப்பிள்’ விழுந்த கதைகூட, வெல்ல நினைப்பவர்களும் சொல்லும் பாடம்தான்.

ஆப்பிள் என்கிற அதிசயக் கனவு மலர அடித்தளமாய் விழுந்த விதைகளும், பிறகு வளர்ந்த நிலைகளும், வளர்ந்த நிலையில் எழுந்த விரிசல் களும், ஒரு நாடகத்தின் சுவாரஸ்யத்தோடு நடந்தேறின.

சான்பிரான் ஸிகோவிலிருந்து நாற்பது மைல் தொலைவில் சிலிகான் பள்ளத்தாக்கின் சிறிய நகரமொன்றில், தன் பட்டப்படிப்பை முடித்தபிறகு 1975-இல் என்ன செய்வதென்று தீவிரமாய் யோசித்துக் கொண்டிருந்த இளைஞர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இந்தியாவில் கொஞ்ச காலம் சுற்றித் திரிந்து விட்டுத் திரும்பியிருந்த ஸ்டீவ் ஜாப்ஸ், அட்டாரியில், வீடியோ கேம் புரோகிராமராகப் பகுதி நேரப் பணிபுரிந்து கொண்டிருந்தார்.

கம்ப்யூட்டரை ஒரு பயனுள்ள பொழுது போக்காகக் கருதிக் கொண்டிருந்த இளைஞர்கள் இணைந்து ‘ஹோம்ப் ரூ கம்ப்யூட்டர் கிளப்’ என்கிற பெயரில்


ஒரு கம்ப்யூட்டரை தானே உருவாக்க முடியாத ஸ்டீவ் ஜாப்ஸ், அந்த சங்கத்தில் உறுப்பினராக இருந்த ஸ்டீவ் வோஸானியா என்கிற இளைஞரின் துணை மேற்கொண்டார். கல்லூரிப் படிப்பைப் பாதியில் நிறுத்தி இருந்த வோஸானியா, கம்ப்யூட்டர் உருவாக்குவதில் கெட்டிக்காரராய் இருந்தார்.
ஒரு சங்கம் வைத்திருந்தார்க்ள். அதில் சங்கமித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

இரண்டு கைகளும் இணைந்தன. ஸ்டீவ் ஜாப் தன் வோஸ்க்ஸ் வேகன் காரை விற்றார். வோஸானியா என்கிற வோஸ், தனது கால்குலேட்டரை விற்றார்.

கலிபோர்னியாவில் இருந்த ஸ்டீவ் ஜாப்ஸ் வீட்டின் கார்ஷெட்டில் இவர்களின் கம்ப்யூட்டர் பயணம் ஆரம்பமானது. வோஸ் வடிவமைத்த ஐம்பது சர்க்யூட் போர்டுகளை விற்கத் தொடங்கினார்கள். ஒவ்வொன்றும் 500 டாலர்களுக்கு விலை போயிற்று.

பீட்டில்ஸ் இசைக் குழுவின் ரசிகராகிய ஸ்டீவ் ஜாப்ஸ், அவர்களின் ‘ஆப்பிள்’ இசைத் தொகுப்பின் நினைவாக, தன் நிறுவனத்திற்கு ஆப்பிள் என்று பெயர் வைத்தார். 1976 ஏப்ரல் 6-இல் ‘ஆப்பிள்’ உதயமானது.

அப்போது ஸ்டீவ் ஜாப்ஸின் வயது 21. வோஸ் வயதோ 26, வணிகத்தில் நல்ல அனுபவமுள்ள மூன்றாவது பங்கு தாரரை உள்ளே கொண்டுவர முடிவு செய்தார்கள். அப்போது அறிமுகமானவர்தான் மைக் மார்க்குலா.

இன்டெல் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் பிரிவை கவனித்துக்கொண்டிருந்தார் மார்க்குலா. அந்நிறுவனத்தின் பங்குகளை வாங்கியிருந்தார். அதன்மூலம் இலட்சக்கணக்கான டாலர்களுக்கு அதிபதியாகி விட்ட மார்க்குலாவிற்கு அப்போது வயது 33.

மார்க்குலா ஒரு நல்ல வணிகத் திட்டத்தை வகுத்துக் கொடுத்தார். அமெரிக்க வங்கியிடம் கடனுதவி பெற்றுத் தந்ததோடு தானே 91,000 டாலர்களை முதலீடு செய்தார்.

வசீகரமான தோற்றத்தில் எளிய செயல் பாட்டு அம்சங்களுடன் வோஸ் வடிவமைத்த ஆப்பிள் ஐஐ பெரும் வெற்றி பெற்றது. 1980-க்குள் நான்கே ஆண்டுகளில் நிகரற்ற வளர்ச்சியைக் கண்டது ஆப்பிள்.

ஜாப்ஸின் கம்ப்யூட்டர் கனவுகளில் மேகின்டாஷ் முக்கியமானது. நவீன அம்சங்களும், விளையாட்டுத்தனமான வெளிப்பாடுகளும் கொண்ட மேக், கம்ப்யூட்டர் உலகில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் தீர்மானத்தோடு உருவாகிக் கொண்டிருந்தது. மேக் உருவாக்கத்திற்காக நியமிக்கப்பட்ட குழுவிற்குக் கண்மூடித்தனமாக ஆதரவு தந்தார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

ஆப்பிள் ஐஐ குழுவினரைத் தாழ்த்தும் விதமாக ஜாப்ஸ் செயல்பட்டு வந்தது பலரின் மனங்களையும் புண்படுத்தியது. ஸ்டீவ் ஜாப்ஸ் ஒரு வசீகர காந்தமாய் விளங்கியவர். தொழில்நுட்பத் தேர்ச்சி இல்லாதபோதும்கூட எல்லோரையும் ஈர்க்கும சக்தி இருந்ததென்னவோ உண்மைதான்.

ஆனால், தன் அலுவலர்களை சரிவர நடத்தத் தெரியவில்லை அவருக்கு. ஓர் அலுவலரிடம் பேசிக் கொண்டிருக்கும் போது, அவர் சொல்வது பிடிக்காவிட்டல் மேசையின் மேல் தன் காலைத் தூக்கி வைத்து, அவர் முகத்துக்கு நேரே நீட்டுவார் ஜாப்ஸ்.

மேகின்டோஷ் உருவாகும் முன்னரே, ஆப்பிள் ஐஐ குழுவினர் மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடத்தப்பட்டனர். இதற்கிடையே ஒரு நிர்வாகியை நியமிக்க முடிவு செய்தனர். மைக்ஸ் காட் என்பவரை நியமித்த மார்க்குலா இரண்டே ஆண்டுகளில் அவரைப் பணியை விட்டு நீக்கினார்.

பிறகு வந்தவர்தான் ஜான் ஸ்கல்லி, பெப்ஸி நிறுவனத்தில் தலைமை நிர்வாகியாக விளங்கியவர். ஜான் ஸ்கல்லி மீது ஜாப்ஸ் மிகுந்த மரியாதை கொண்டிருந்தார். இருவரும் சேர்ந்து ஆப்பிள் வளர்ச்சியின் அசுர அத்தியாயங் களை உருவாக்கினார்கள்.

1984இல், மேகின்டோஷ் அறிமுகத்திற்காக அவர்கள் செய்த அதிரடி விளம்பரம் அமெரிக்காவை உலுக்கியது.

மேகின்டோஷ் எனப்படும் மேக், நவீன அம்சங்களை நிறையக் கொண்டிருந்தது. ஆனால் நவீன அம்சங்களே அதன் செயல்திறனுக்கு முட்டுக்கட்டை போட்டன.

இதற்கிடையே ஆப்பிள் நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் ஜாப்ஸ் அனாவசியத் தலையீடுகளை செய்வதாகப் புகார்கள் எழுந்தன. ஜாப்ஸின் அதிகாரங்களைப் பறிக்க ஸ்கல்லி முடிவு செய்தார். விரிசல் வலுத்தது.

1985இல் மே மாதம் 24ம் தேதி நடந்த போர்டு மீட்டிங்கில் தன் இயக்குநர் குழு தன்னை ஆதரிக்க வில்லை என்று அறிந்து கொண்டார் ஸ்டீவ் ஜாப்ஸ். சில மாதங்களில் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.

ஜாப்ஸ் ஆப்பிள் நிறுவனத்தில் இருந்த கால கட்டத்தில்தான், கம்ப்யூட்டர் துறை, தன் வளர்ச்சியின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ஆளுமையும் வசீகரமும் ததும்பி வழிந்த ஸ்டீவ் ஜாப்ஸ், எதிரி நிறுவனம் ஒன்றில் தலையெடுக்கத் தொடங்கியிருந்த ஒரு சாதுவான இளைஞனை அலட்சியமாகப் பார்த்தார்.

விடலைப் பருவத்தில், கனத்த கண்ணாடிகளுடன், நடுவீதியில் சிக்கிய மான் போல் கூச்சமும் விலகல் மனோபாவமும் கொண்டு, அதேநேரம் தன் காரியத்தில் கண்ணும் கருத்துமாய் செயல்பட்டுக் கொண்டிருந்த அந்த இளைஞனின் பெயர் – பில்கேட்ஸ்!!

அவரை வெகு துச்சமாக மதித்தார் ஸ்டீவ் ஜாப்ஸ், அப்போது ஆப்பிளின் வருடாந்திர விற்று வரவு 1.5 பில்லியன் டாலர்கள். மைக்ரோ சாஃப்ட்டுக்கோ வெறும் 98 மில்லியன் டாலர்கள்தான்.

ஸ்டீவ் ஜாப்ஸ் வெளியேறிய பிறகு ஜான் ஸ்கல்லி, நிறுவனத்தின் தலைவராகவும் தலைமை நிர்வாகியாகவும் பொறுப்பேற்றார். தளர்ந்து கொண்டிருந்த நிறுவனத்தை “மளமள”வென்று வளர்ச்சிப் பாதையில் வழிநடத்தினார் அவர். ஸ்கல்லி ஒரு தேர்ந்த நிர்வாகி. ஆனால் தொழில்நுட்பப் பின்புலம் கிடையாது.

அதேநேரம், மைக்ரோ சாஃப்ட் நிறுவனத்தின் ஆளுமைமிக்க தலைவராய் வளர்ந்த பில்கேட்ஸ், ஒரு தொழில்நுட்ப நிபுணராகவும் தலைசிறந்த நிர்வாகியாகவும் விளங்கினார்.

மிக வேகமாக வளர்ந்து வந்த ஆப்பிளின் தலைவர், தொழில்நுட்பப் பின்புலம் இல்லாதவ ராய் இருந்தார். எனவே, தொலைநோக்கோடு எடுத்திருக்க வேண்டிய ஒரு முக்கிய முடிவை மறந்தார்.

இன்டர்நெட் – இதன் தாக்கம் எதிர் காலத்தில் எப்படி இருக்கும் என்பதை அனுமானிக்கவில்லை ஆப்பிள். வோஸானியா எடுத்த சில தொழில்நுட்ப முடிவுகளும் தவறாகிப் போயின. நிறுவனத்தில் மீண்டும் கருத்து வேறுபாடுகள் தலைதூக்கின.

இம்முறை ஜான் ஸ்கல்லி பலியிடப்பட்டார். 1993-இல் ஜூன் மாதத்தில் பல் பிடுங்கப்பட்ட பாம்பானார் ஸ்கல்லி. அதன்பின் அவர் வெளியேற நேர்ந்தது.
ஸ்கல்லியை நகர்த்திவிட்டுத் தலைமை நாற்காலிக்கு வந்தவர் ஸ்பின்ட்வர். ஒரு காலத்தில் ஸ்கல்லியால் நியமிக்கப்பட்டவர். ஆனால், ஸ்பின்ட்வரும் 1996-இல் அகற்றப்பட்டார்.

இன்டர்நெட்டை ஏற்பதில் ஆப்பிள் நிறுவனம் மிகவும் பின் தங்கியது. இன்டர்நெட் கலாச்சாரத்தை மையப்படுத்தியே மைக்ரோசாப்ட் முன்னணிக்கு வந்திருந்தது.

அமெரிக்க முன்னணி இதழ்கள் ஆப்பிள் நிறுவனத்தின் வீழ்ச்சியைப் பதிவு செய்தன. “ஒவ்வொரு சமூகமும் தத்துவத்தால் வளர்கிறது. தனிமனிதனால் அழிகிறது” என்றார் கவிஞர் வைர முத்து.

தனிமனித மோதல்களாலும் தொலை நோக்கை இழந்ததாலும் வெற்றியின் உச்சத்தி லிருந்து விழுந்தது ஆப்பிள். என்றாலும் மனித குலத்தின் முன்னேற்றத்திற்கு கணினி என்னும் வரத்தை வழங்கிய மூலமூர்த்திகளில் முக்கிய மானவர் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2005 ஜுன் 12இல், அவர் ஆற்றிய உரையில், தன் வாழ்வு குறித்தும் வந்திருக்கும் நோய் குறித்தும் பகிரங்கமாகப் பேசினார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

பதினேழு வயதிருக்கும்போது வாசகம் ஒன்றை வாசித்தேன். “இன்றுதான் உன் கடைசி நாள் என்பதுபோல் ஒவ்வொரு நாளையும் வாழ்ந்திடு” என்பதே அந்த வாசகம். வாழ்வின் முக்கிய முடிவுகள் எடுக்க இந்த வாசகம் எனக்குதவியது.

ஓராண்டுக்கு முன்பு எனக்குப் புற்றுநோய் என்பது உறுதியானது. அதை குணப்படுத்தவே முடியாதென்று மருத்துவர்கள் நினைத்தார்கள்.

மற்றுமொரு சோதனையில் வாழ்க்கை குறிப்பிட்ட காலம்வரைதான். வாழ்கிற நாட்களை வீணே கழிக்காதீர்கள். அடுத்தவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு உள்ளே ஒலிக்கிற குரலை புறக்கணிக்காதீர்கள். “உங்கள் குறிக் கோளுக்கே முதலிடம் கொடுங்கள்” என்றார் ஸ்டீவ் ஜாப்ஸ்.

2011 அக்டோபரில் காற்றில் கலந்த அவரின் இறுதி சுவாசம், பூமிப்பந்தின் போக்கை திசை மாற்றிய அமைதியுடன் நிறைவடைந்திருக்கும் என்பதுதான் நம் பிரார்த்தனையும் நம்பிக்கையும்.



- மரபின் மைந்தன் ம. முத்தையா

ஒரே தளத்தில் உலகப் பத்திரிகைகள்!

உலகின் 82 நாடுகளில் வெளியாகும் 877 பத்திரிக்கைகளை ஒரே இணைய தளத்தில் பெறலாம். இந்த வாய்ப்பினைhttp://www.newseum. org/todaysfrontpages/flash/ என்ற முகவரியில் உள்ள இணைய தளம் தருகிறது. தளத்தின் செயலுக்கு ஏற்ற வகை யில் இதற்கு நியூசியம் (newseum) எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த தளத்தில் நுழைந்தவுடன் அமெரிக்க கண்டத்தின் மேப் காட்டப்பட்டு எந்த நகரங்களிலிருந்து வெளியாகும் தினசரி நாளிதழ்கள் காட்டப்படுகின்றனவோ, அவற்றை அடையாளம் காட்டும் வகையில் புள்ளிகள் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. மற்ற நாடுகளுக்கு மேலாக அந்த கண்டங்களின் பெயர்களோடு டேப்கள் கிடைக்கின்றன. எனவே நாம் விரும்பும் நாட்டில், நகரம் மேப்பில் உள்ள இடத்தில், மவுஸ் கர்சரைக் கொண்டு சென்றால், என்ன செய்தித்தாள் என முன் பக்கத் தோற்றம் காட்டப்படுகிறது. அந்த செய்தித் தாளின் செய்திகளைப் படிக்க அதனைக் கிளிக் செய்து அதன் மின் பதிப்பைப் பெறலாம். தொடர்ந்து கிளிக் செய்தால், செய்தித்தாள் முழுவதும் படிக்கக் கிடைக்கும்.

ஆங்கிலம் மட்டுமின்றி பிற மொழிகளில் வெளியாகும் செய்தித்தாட்களும் கிடைக்கின்றன. ஒவ்வொரு நாளும் அந்த அந்த நாளுக்குரிய செய்தித்தாள் கிடைக்கிறது. செய்தித்தாள் நிறுவனம் தன் பக்கங்களை மாற்றுகையில், இங்கும் அப்டேட் செய்யப்படுகிறது. எனவே பன்னாட்டு செய்திகளை ஒரே இணையதளம் மூலம் கிடைக்கும் வாய்ப்பு பெறுகிறோம்.

எந்தவிதத் தணிக்கையும் இன்றி காட்டப்படுவதால், சில வேளைகளில் நாட்டுக்கு நாடு பிரச்னைக்குரிய தடை செய்யப்பட்ட செய்திகளும் இங்கு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

Windows- 7 வேகமாக இயங்க!


விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிக வேகமாக பயனாளர்களின் விருப்பத் தேர்வாக மாறி, பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சிஸ்டத்தில், சில டிப்ஸ்களை மேற் கொண்டு, அதன் இயக்கத்தை விரைவு படுத்தலாம். நம் கம்ப்யூட்டர் செயல்பாடு களை வேகமாக மேற்கொள்ளலாம். அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம்.

1. விரைவாக அப்ளிகேஷனை இயக்க: கீ போர்டில் விரல்களை இயக்கியவாறே, அப்ளிகேஷன் புரோகிராம்களை இயக்க வேண்டுமா? முன்பு இவற்றை இயக்க, மவுஸ் கொண்டு, முகப்பு திரையில் ஐகான் இருந்தால், அதன் மீது கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். அல்லது விண்டோஸ் லோகோ கீ அழுத்தி, கிடைக்கும் பட்டி யலில், ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்து, அதில் அப்ளிகேஷன் புரோகிராமின் இடம் தேடி கிளிக் செய்திட வேண்டியதிருக்கும். விண்டோஸ் 7 சிஸ்டத்தில் இப்படி எல்லாம் அலைய வேண்டியதில்லை. விண்டோஸ் கீ அழுத்தி, கிடைக்கும் கட்டத்தில், அப்ளிகேஷன் பெயரைச் சுருக்கமாக டைப் செய்து, (எ.கா: Google Chrome இயக்க ‘chr’, iTunes இயக்க ‘it’) என்டர் தட்டினால் போதும். அல்லது டாஸ்க் பாரில் இந்த அப்ளிகேஷன்களை வைத்திருந்தால், விண்டோஸ் கீயுடன், டாஸ்க் பாரில் அந்த அப்ளிகேஷன் இடம் பெற்றுள்ள இடத்தின் எண்ணை இணைத்து அழுத்தினால் போதும். எடுத்துக்காட்டாக, குரோம் பிரவுசர் இரண்டாவது இடத்தில் இருந்தால், விண்டோஸ்+2 அழுத்தினால் குரோம் பிரவுசர் இயங்கத் தொடங்கும்.

2. ஆட்டோ பிளே கட்டுப்படுத்துதல்: ஒரு சிடி அல்லது டிவிடி திரைப்பட சிடியைப் போட்டவுடன், அது இயங்கத் தொடங்கு கிறது. அது ஏன்? என்றாவது நீங்கள் யோசித்தது உண்டா? விண்டோஸ் ஆட்டோ பிளே (Windows Auto Play) என்ற செயல்பாடு இதனை இயக்குகிறது. இந்த இயக்கம் எந்த சிடிக்கும் பொருந்தும். அது பைல்கள் அல்லது புரோகிராம்கள் இருப்பதாக இருந்தாலும் இதே போலச் செயல்படும். இதனை நம் விருப்பப்படியும் மாற்றி அமைக்கலாம். இதற்கு முதலில் Control Panel> AutoPlay எனச் செல்லவும். இங்கு சிடி, டிவிடி, கேமரா, ஸ்மார்ட் போன் என எந்த சாதனத்தை இணைத்தாலும் அதனை எப்படி இயக்க வேண்டும், இணைத்தவுடனா அல்லது நாம் விரும்பும் போதா என செட் செய்திடலாம்.

3. தானாக இடம் மாறும் விண்டோ: மாறா நிலையில், விண்டோஸ் 7 சிஸ்டம், திறக்கப் பட்டிருக்கும் விண்டோ ஒன்றை நீங்கள் ஓர் ஓரத்திற்கு இழுத்துச் சென்றால், விண்டோ வினைச் சுருக்கி ஓரத்தில் அமைக்கும்; மேலாக இழுத்தால், திரை முழுமையும் கிடைக்கும். வேறு வகையில் திரையில் பாதியாக அமைக்கும். பல விண்டோக் களை ஒரே நேரத்தில் திரையில் பார்த்த வாறே இயக்க எண்ணுபவர்களுக்கு இந்த செயல்பாடு உதவக் கூடியதாகவே உள்ளது. ஆனாலும், பலருக்கு இது எரிச்சலைத் தரும். இந்தச் செயல்பாட்டினை நிறுத்த எண்ணுவார்கள். இதனை நிறுத்த, Control Panel, Ease of Access Center சென்று, Make the mouse easier to use என்பதில் கிளிக் செய்திடவும். இதன் பின்னர், Prevent windows from being automatically arranged when moved to the edge of the screen என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். அடுத்து ஓகே கிளிக் செய்திடவும்.

4. தவறினைச் சரி செய்திட வேறு ஒரு பயனாளராக: விண்டோஸ் இயக்கம் அல்லது தினந்தோறும் நீங்கள் பயன் படுத்தும் ஒரு அப்ளிகேஷன் இயங்குவதில் பிரச்னைகளை எதிர்கொள்கிறீர்களா? விண்டோஸ் 7 இயக்கத்தில் இதனைப் புதிய ஒரு வழியில் சரி செய்திடலாம். வழக்கமான உங்கள் யூசர் அக்கவுண்ட் விடுத்து, தனியாக ஒரு யூசர் அக்கவுண்ட் திறந்து, அந்த பயனாளராக இந்த அப்ளிகேஷன்களை இயக்கிப் பார்க்கவும். இந்த வழியில் மீண்டும் பிரச்னைகள் வருகின்றனவா எனக் கண்காணிக்கவும். இந்த அக்கவுண்ட்டில் பிரச்னைகள் இல்லை என்றால், பிரச்னைகள் சிஸ்டத்தைப் பாதிக்கும் வகையில் இல்லை என்று பொருளாகிறது. அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்ததில், அல்லது செட்டிங்ஸ் அமைப்பதில் ஏதேனும் சிறிய அளவில் தவறு நேர்ந்திருக்கலாம். இரண்டு அக்கவுண்ட்களிலும் பிரச்னைகள் ஏற்பட்டால், அப்ளிகேஷன் அல்லது ஆப்பரேட்டிங் சிஸ்டம் மீண்டும் ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும்.

5. விண்டோஸ் எக்ஸ்புளோரரில் பைலின் துணைப் பெயர்: பைல்களின் துணைப் பெயர், நீங்கள் எத்தகைய பைலைத் தேடுகிறீர்கள் அல்லது தேர்ந்தெடுக்கிறீர்கள் என்பதைக் காட்டும். .doc என்பது வேர்ட் பைலின் துணைப் பெயர். ஒரு டிஜிட்டல் போட்டோ .jpg என்ற துணைப் பெயரினைக் கொண்டுள்ளது. இப்போது வரும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல்களின் துணைப் பெயரை மறைத்துக் காட்டுகிறது. ஆனால், இந்த பெயர் காட்டப்பட வேண்டும் என நீங்கள் விரும்பினால், விண்டோஸ் எக்ஸ்பு ளோரரை இயக்குங்கள். பின்னர் Organize, Folder and search options எனச் செல்லுங்கள். இங்கு View டேப் தேர்ந்தெடுக்கவும். இதில் Hide extensions for known file types என்பதற்கு முன்னால் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.

6. லேப்டாப் ட்ராக்பேட் இயக்க நிறுத்தம்: லேப்டாப் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள், தொடக்கத்தில் கீ போர்டில் டைப் செய்கையில் மிகவும் சிரமப்படுவார்கள். அவர்கள் விரல்கள் ட்ரேக் பேடைத் தொட்டு விட்டால், உடன் கர்சர் எங்காவது சென்று நிற்கும். டைப் செய்வது எல்லாம் வேண்டாத இடத்தில் டைப் ஆகும். ட்ரேக் பேடில் விரல் அல்லது உள்ளங்கைப் பாகம் படாமல் டைப் செய்வது மிகவும் கஷ்டமாக இருக்கும். இந்த சிரமத்தை TouchpadPal 1.2 என்ற புரோகிராம் நீக்குகிறது. இதனைhttp://tpp.desofto.com/ என்ற முகவரியில் உள்ள இணைய தளத்திலிருந்து தரவிறக்கம் செய்து, கம்ப்யூட்டரில் பதிந்து கொண்டால், பிரச்னை தீரும். இது தானாகவே இயங்கி, நீங்கள் கீ போர்டில் டைப் செய்கையில், ட்ரேக் பேடின் செயலாக்கத்தினை நிறுத்திவிடும்.