Thursday, December 29, 2011

அண்ணா பல்கலைகளை இணைக்க உயர்நிலைக் குழு அமைப்பு.

தமிழகத்தின் 5 அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் இணைப்பை கண்காணிக்க, ஒரு உயர்நிலைக் குழுவை தமிழக அரசு அமைத்துள்ளது.ஆறு பேர் கொண்ட இக்குழுவின் தலைவராக, கூடுதல் தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன் இருப்பார். இதர உறுப்பினர்களாக, உயர்கல்வித் துறையின் முதன்மை செயலர், மாநில நிதித்துறை செலவினங்கள் பிரிவின் செயலர், சட்டத்துறை செயலர், தொழில்நுட்பக் கல்வி ஆணையர் மற்றும் உயர்கல்வித் துறையின் இணை செயலாளர் போன்றோர் இடம் பெற்றுள்ளனர். இதுதொடர்பான அரசு ஆணை சில நாட்களுக்கு முன்னர் பிறப்பிக்கப்பட்டது.

சென்னை, மதுரை, கோயம்புத்தூர், திருச்சி மற்றும் திருநெல்வேலி ஆகிய 5 இடங்களில் அமைந்திருக்கும் அண்ணா தொழில்நுட்ப பல்கலை அமைப்பை ரத்து செய்யும் ஆணை, கடந்த செப்டம்பர்(2011) மாதமே, அரசு உத்தரவில் இடம்பெற்றாலும், அதற்கான தேதியை அரசு குறிப்பிட வேண்டியிருந்ததால், உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், இணைப்பு செயல்பாட்டில் பலவிதமான நடைமுறைகள் கடைபிடிக்கப்பட வேண்டியிருந்தது.

ஏனெனில், சென்னை தவிர்த்த பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்களின் கீழ்வரும் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருக்கும் மாணவர்களின் கல்வி நிறைவு தொடர்பான ஏற்பாட்டை செய்ய வேண்டியிருந்தது. மேலும், பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைகளின் கீழ் இயங்கிய பொறியியல் கல்லூரிகள், மீண்டும் சென்னை அண்ணா பல்கலையுடன் இணைக்கப்பட வேண்டிய நடைமுறைகள் உள்ளன. அதேபோன்று, அந்தந்த பல்கலைக்கழக கல்லூரிகளும், அண்ணா பல்கலைக்கழக கல்லூரியாக மாற்றப்பட வேண்டும்.

இவைத்தவிர, பிற அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் மற்றும் பல்கலைக்கழக கல்லூரிகளின் சொத்துக்கள் மற்றும் ஆவணங்களை மாற்றுதல், அங்கே பணிபுரியும் ஊழியர்களின் பணி நிலைகளை மாற்றுதல் போன்ற சிக்கல்களும் உள்ளன. எனவே, முறையான திட்டமிடுதல் மற்றும் சரியான செயல்பாட்டு நடைமுறை போன்றவை இருந்தால்தான், இந்த இணைப்பு நடவடிக்கை வெற்றிகரமாகவும், சிறப்பாகவும் நடைபெறும்.

பொருட்களை இடமாற்றுதல் மட்டுமின்றி, பிராந்திய அலுவலகங்களை நிர்வகிப்பது மற்றும் அதற்கான அதிகாரங்கள் மற்றும் பணிகளை வரையறை செய்வது ஆகியவைக் குறித்தும், தற்போது நியமிக்கப்பட்டிருக்கும் இந்தக் குழு முடிவுசெய்ய வேண்டியுள்ளது. மேலும், சொத்துக்கள் பற்றிய விபரங்களைப் பெற, அந்தந்தப் பகுதிகளின் நிதி தணிக்கைத் துறைகளின் உதவியையும் இந்தக் குழு கோரும்.

தமிழக அரசால் நியமிக்கப்பட்டுள்ள இந்தக் குழுவிற்கு, அண்ணா தொழில்நுட்ப பல்கலைக்கழகங்கள், ஒரே "சென்னை அண்ணா பல்கலைக்கழகமாக" மாற்றப்படும் வரை, அனைத்துவிதமான நிதி, போக்குவரத்து மற்றும் நிர்வாக உதவிகளை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆட்சிக்காலத்தில், சில வசதிகளைக் கருத்தில்கொண்டு, சென்னை அண்ணா பல்கலைக்கழகம், 5 கல்வி நிறுவனங்களாகப் பிரிக்கப்பட்டது. அதன்படி, சென்னை தவிர, கோவை, திருச்சி, மதுரை மற்றும் திருநெல்வேலி போன்ற இடங்களிலும் அண்ணா தொழில்நுட்ப பல்கலைகள் ஏற்படுத்தப்பட்டு, அதன்கீழ் அப்பகுதியிலிருந்த பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டன. ஆனால், கடந்த 2011, மே மாதம், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, பிரிக்கப்பட்ட பல்கலையை, ஒரே "சென்னை அண்ணா பல்கலையாக" மாற்ற முடிவு செய்யப்பட்டு, அதற்கான சட்டமும் வெளியிடப்பட்டது.

இச்சட்டத்திற்கு, தமிழக ஆளுநர் ரோசய்யாவும் ஒப்புதல் அளித்தார். இந்த நிலையில், அப்பணிகளை விரைவுபடுத்தவும், முறைப்படுத்தவும் மேலதிகாரிகளைக் கொண்ட இந்தக் குழு அமைக்கப்பட்டுள்ளது.


- Kalvimalar

No comments:

Post a Comment